உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....

Tuesday, June 29, 2010

கண்ணீர் வரவழைக்கும் ஒரு தன்னம்பிக்கை வீடியோ..




நன்றி கேஆர்பி.செந்தில்

ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் இனி எளிதாக எழுதலாம்

பள்ளி முதல் கல்லூரிவரை , அலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள்
வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி
எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ் நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து
எழுதுகின்றனர்.அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ கடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு அனுபவம் இல்லை என்று, அனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.

ஆங்கிலத்தில் இனி எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம் நமக்கு
உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.readwritethink.org/files/resources/
interactives/letter_generator//



இந்த தளத்திற்க்கு சென்று நம் பெயரைக் கொடுத்து எளிதாக எந்த
கடிதம் வேண்டுமானாலும் உருவாக்கலாம். சம்பிரதாய கடிதங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க நமக்கு ஒவ்வொரு டியையும்
கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறது. எந்த இடத்தில் எதற்க்காக என்ன
பெயர் கொடுக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் சம்பள உயர்வு
வேண்டும் என்றால் எப்படி கடிதம் எழுத வேண்டும் யாருக்கு எந்த
பதிவியில் இருப்பவர்களுக்கு எழுதவேண்டும், எதை மையப்படுத்தி
நாம் கேட்க வேண்டுவதை ஆங்கிலத்தில் எப்படி எல்லாம் எளிய
முறையில் இலக்கண பிழை இல்லாமல் எழுதலாம் போன்ற அத்தனை
தகவல்களையும் கொண்டு நம்மை ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள்
எழுத உதவுகிறது. பார்ப்பதற்க்கு எளிதாக எந்த விளம்பரமும் இல்லாமல்
தெரிகிறது. கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்

நன்றி விண்மணி

சகோதரர் அலாவுதீன் என்பவர் மின்னெஞ்சலில் அனுப்பியது

Video of BP Oil Blaze, Rig sinking into Gulf of Mexico

Video of BP Oil Blaze, Rig sinking into Gulf of Mexico

Tuesday, June 22, 2010

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்



எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)



திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.



1. கற்பனையை விட்டு விட்டுக் கையேந்துங்கள்!

திருமண வயதை எட்டிய எல்லாப் பெண்களுக்கும் தனது எதிர்காலக் கணவன் பற்றிய ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் இருப்பது இயல்புதான். வீட்டில கல்யாணப் பேச்சு அடிபடும் போதே அவள் கனவுகளில் மிதக்க ஆரம்பிக்கின்றாள். கணவனது உடல் அமைப்பு, உருவ அமைப்பு, உடை-நடை-பாவனை, பேச்சு என அனைத்தையும் பற்றிக் கற்பனை பண்ணி, தானே தனக்கென ஒரு கற்பனைக் கணவனைப் படைத்து வைத்துக்கொள்கிறாள். திருமணத்தின் பின்னர் தனது கணவன் தனது எதிர்பார்ப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் மாற்றமாக இருக்கும் போது ஏமாற்ற உணர்வையும், வாழ்வின் இலக்கை அடையாத உணர்வையும் பெறுகின்றாள். எனவே திருமணக் கனவில் மிதக்கும் கன்னியரே! உங்கள் கற்பனையைக் களையுங்கள். ஒரு ஸாலிஹான கணவனை வேண்டி ஐவேளைத் தொழுகையிலும், தஹஜ்ஜத் வேலையிலும் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.



(குடும்பத்தையும், சமய-சமூகக் கட்டுப்பாடுகளையும் மீறித் தாமே தமக்குரிய கணவனைத் தேடிக் கொண்டு ஓடிச் செல்லும் பெண்கள் பற்றியோ, சினிமாக் கதாநாயகர்களைக் கற்பணைக் கணவர்களாக நினைத்துக் கொண்டுள்ள பெண்களைப் பற்றியோ இங்கு நாம் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திற்கொள்க!)



2. வலியின் துணையுடன் வாழ்க்கைத் துணையை அடையுங்கள்!

ஆண்கள்தான் பெண் பார்க்க வேண்டும். மணப்பெண்ணைத் தேட வேண்டும், இதுதான் முறை. அதற்கு மாற்றமாகப் பெண்ணே தனக்கென வாழ்க்கைத் துணையைத் தேடும் நிலை நீங்க வேண்டும். பெண்களுக்கான வாழ்க்கைத் துணையை அவர்களது ‘வலீ’ எனும் பொருப்பாளர்கள் தேடுவதில் குற்றமோ, குறையோ கிடையாது. ஒரு தந்தை அல்லது சகோதரன் தனது மகளை அல்லது சகோதரியை மணம் முடித்துக் கொள்வீர்களா? என மார்க்க ஈடுபாடுடைய ஒருவரிடம் கேட்பது குறை அல்ல. அல்லது ஒரு பெண்ணின் தந்தையிடமோ அல்லது சகோதரனிடமோ உங்கள் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துத் தருவீர்களா? என்று கேட்பதும் குற்றமில்லை. உமர்(ரலி) அவர்களது மகள் ஹப்ஸா(ரலி) அவர்களது கணவன் மரணித்ததன் பின்னர் தனது மகளை மணமுடித்துக் கொள்வீர்களா? என உமர்(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அவர்கள் அப்போது மணமுடிக்கும் எண்ணம் இல்லை என்றதும், அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களிடமும் கேட்டார்கள்.



பெண்ணின் கண்ணியமும், கற்பும் காக்கப்படவும் அவளது வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கவும் சமூகக் கட்டுக்கோப்புக் களையாமல் இருக்கவும் ஒரு பெண் தனக்குரிய வாழ்க்கைத் துணையைத் தானே தேடிச் செல்லாமல் ‘வலீ’ எனும் தனது பொருப்பாளரின் துணையுடன் வாழ்க்கைத் துணையைத் தேடிச் செல்வது அவசியமாகும்.



3. தகவல் அறிந்து, தரம் அறிந்து தாரமாகுங்கள்!!

உங்களைப் பெண் கேட்டு வந்தவரது உடை-உடல்-தோற்றத்தை மட்டும் பார்க்காது, அவர் பற்றிய முழுத் தகவல்களையும் பெற்று நிதானமாக முடிவு செய்யுங்கள்! உங்களைப் பெண் பார்த்தவரின் தொழில் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்! மூட்டை சுமப்பதென்றால் கூட ஹலாலான உழைப்பு என்றால் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஆனால் ஹறாமான உழைப்பாக இருந்தால் நீங்களும், உங்களது குழந்தைகளும் ஹறாத்தை உண்டு, ஹறாத்தை அணிந்து, ஹறாத்தைக் குடித்து ஹறாத்திலேயே வாழும் ஆபத்து உள்ளதல்லவா?



உங்கள் பெண் கேட்டவரின் குண-நலன்கள் என்ன? மார்க்க ஈடுபாடு என்ன? என்பது குறித்து தீர விசாரியுங்கள்! சில பெற்றோர்கள் கூட இதில் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். திருமணம் முடித்த பின்னர்தான் மாப்பிள்ளை இன்னொரு இடத்தில் மணமுடித்துப் பிள்ளைகள் இருக்கும் செய்திகளும் தெரிய வருகின்றது.



சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு ‘மாப்பிள்ளை லண்டனில் சிடிசன்; கலியாணம் முடிந்ததும் மகளையும் அங்கு அழைத்துப் போவார்!’ என்று பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.



திருமணம் முடித்ததும் மாப்பிள்ளை போய் விஸா ஏற்பாடு செய்வதாகக் கூறிச் செல்கின்றார். பின்னர்தான் அவர் அங்கு மணமுடித்திருப்பதும், பெற்றோரைத் திருப்திப் படுத்துவதற்காகச் செய்த திருமணம்தான் இது என்பதும் தெரிய வருகின்றது.



சிலர் வரதட்சணை பெறுவதற்காகவும், வெளிநாடு செல்வதற்கு ஏஜென்ஸிக்குப் பணம் கட்டுவதற்காகவும் மணமுடித்து விட்டு கை விட்டு விடுகின்றனர். நாம் பலதாரமணத்தைக் குறை கூறவில்லை அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவோர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே விளக்கியிருக்கின்றோம்.



எனவே இது வாழ்க்கைப் பிரச்சினை. அவசரப்பட்டு முடிவு செய்து விட்டு அவதிப்பட முடியாது எனவே நிதானமாக முடிவு செய்ய வேண்டும். தீர விசாரித்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக ஒருவர் பற்றி விசாரிக்கப்ட்டால் அவரது குறையைச் சொல்வது இஸ்லாத்தில் ஆகுமானதாகும். அது புறம் பேசுவதில் அடங்காது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.



4 ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுங்கள்!

திருமணம் முடிப்பதற்கு முன்னர் கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது சுன்னத்தாகும். சிலர் தான் நல்ல பிள்ளை என்று காட்ட ‘நீங்களே பார்த்து முடிவெடுங்கள்!’ என்று கூறி விடுகின்றனர்.



‘பார்க்க வேண்டும்!’ என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? என்று சிலர் நினைத்து, பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பார்க்க இருக்கும் உரிமையை மறுக்கின்றனர். இது தவறாகும். ஒரு பெண், ‘நான் மணம் முடிக்கப் போகும் ஆணைப் பார்த்துத்தான் முடிவு செய்வேன்!’ என்று கூறப் பூரண உரிமையுடையவள். அதைப் பெற்றோர்கள் மறுக்கக் கூடாது; அங்கீகரிக்க வேண்டும்.



5. இஸ்திஹாராச் செய்யுங்கள்!

உங்களைப் பெண் பார்த்தவர் பற்றி விசாரித்து அறிந்ததுடன் மட்டும் நின்று விடாமல் இஸ்திஹாராத் தொழுகை தொழுது அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுங்கள்! அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்!



6. பெற்றோரின் சிரமத்தை உணருங்கள்!

வரதட்சணைக் கொடுமை மாப்பிள்ளை வீட்டாரால் மட்டும் நடப்பதில்லை. சிலபோது பெண் பிள்ளைகள் பெற்றோரின் கஷ்டங்களை உணராது நடந்துகொள்கின்றனர்.



ஒருவன் தனது மூத்த மகளுக்குப் பணம் கொடுத்திருப்பார்; நகை கொடுத்திருப்பார்; வீடு கொடுத்திருப்பார். இளைய மகளுக்குத் திருமணத்தின் போது மாப்பிள்ளை ‘சீதனம் வேண்டாம்!’ என்று கூறினாலும் ‘மூத்த சகோதரரிக்கு கொடுத்தது போல் எனக்கும் வேண்டும்!’ என நிர்ப்பந்திக்கும் பெண்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் கூட ‘தாத்தாவுக்கு வீடு கொடுத்தாங்க! நீங்க மட்டும் கஷ்டப்பட்டு வீடு கட்ட வேண்டுமா?’ எனத் தந்தையின் கஷ்டத்தை உணராது தன் கணவன் கஷ்டப்படக் கூடாது என்று எண்ணும் பெண்கள் உள்ளனர். உங்களுக்குத் திருமணம் தொடர்பான பல கனவுகள் இருக்கலாம். அதை நிறைவேற்றும் சக்தி உங்கள் பெற்றோருக்கு இல்லாது இருக்கலாம்.



எனவே, மணப் பெண்களே!

உங்கள் குடும்பம், பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்!



7. அறிந்துகொள்ளுங்கள்!

திருமணத்திற்கு முன்னரே திருமணம் தொடர்பான சட்டங்களையும், விளக்கங்களையும் அறிந்துகொள்ளுங்கள்! குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பு, கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், கணவனின் உரிமைகள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்! இதே வேளை, கணவனின் குடும்பத்தினருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விபரத்தையும், தெளிவையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்! உங்கள் இல்லறம் இனிமையாக அமைய இது பெரிதும் உதவும்!



திருமணந் தொடர்பான சரியான தெளிவு இல்லாமல் தொலைபேசி மூலம் தொடர்பு, பேனா நண்பர், ‘ஃபேஸ்புக்’ தொடர்பு, இணையத்தில் அரட்டைத் தொடர்பு என்பவற்றை மட்டும் வைத்துக் கூட இன்று திருமணங்களும், திருட்டுத் திருமணங்களும் நடக்கின்றன. இவை இஸ்லாமிய நடைமுறைக்கும், குறித்த பெண்களின் வாழ்க்கைக்கும் பாரிய சவாலாக அமைந்து விடுகின்றன.



எனவே, திருமணங் குறித்த தீர்க்க சிந்தனையும், நிதானமான பார்வையும் வளர்க்கப்பட வேண்டும்!

நன்றி இஸ்லாம் கல்வி

Sunday, June 13, 2010

பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?

பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?




குஜராத் மாநிலத்தின் கோத்ராவைச் சேர்ந்த பீபி காத்தூன் எனும் தாயின் மூன்று மகன்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோத்ராவில் ரயில் பெட்டி ஒன்றுக்குத் தீ வைத்து 58 பேரைக் கொடூரமாகக் கொலை செய்ய உதவினர் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இதுவரை இக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதச் சதி இருப்பதாகக் குஜராத் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அச்சதியை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்துவிட்ட போதிலும் இம்மூவருக்கும் இன்றுவரை பிணைகூட கிடைக்கவில்லை.



கோத்ரா ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள, பெரும்பாலும் உழைக்கும் மக்கள் நிறைந்த சேரியான ரஹ்மத் நகரில்தான் பீபி வசித்து வந்தார். கோத்ரா சம்பவம் நடந்த அன்று மாலை இச்சேரிக்குள் குவிந்த சீருடையணியாத போலீசார் பீபி காத்தூனின் மூன்று மகன்கள் உட்பட 14 இளைஞர்களைப் பிடித்துச் சென்றனர். இதனைக் கண்டு கொதித்தெழுந்த அப்பகுதிப் பெண்களிடம் தங்களது உயரதிகாரி விசாரித்தவுடன் அவர்களை அனுப்பிவிடுவதாகப் போலீசார் கூறினர். ஆனால் எட்டு ஆண்டுகளாகியும் அவர்கள் யாரும் திரும்பிவராத நிலையில் "இன்னமுமா அந்த உயரதிகாரி வரவில்லை?'' என பீபி காத்தூன் வருத்தத்துடன் கேட்கிறார்.



கைதான அனைவரையும் முதலில் ரயில்வே காவல்நிலையத்தில் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் இருக்குமிடத்தைப் பற்றிச் சொல்லக்கூட போலீசார் மறுத்துவிட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு தாங்கள் அகமதாபாத் சபர்மதி சிறைச்சாலையில் இருப்பதாகக் கூறி பீபியின் மகன்கள் தங்களின் தந்தைக்குக் கடிதம் எழுதினர். கோத்ராவில் ரயில் பெட்டியைக் கொளுத்த சதி செய்ததாக இவர்களுடன் சேர்த்து 131 பேர் மீது "பொடா'' கருப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.



சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தன் மகன்களைப் பார்த்த பீபிக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அவர்கள் உடல் மெலிந்து பேயறைந்தது போலக் காணப்பட்டனர். தாங்கள் பட்ட அடிகள் சித்திரவதைகளைப் பற்றி அருகில் இருந்த சிறை ஊழியர்களுக்குக் கேட்காவண்ணம் கிசுகிசுக் குரலில் அவர்கள் விம்மினார்கள். தாங்கள் சிறுநீர் கழித்த வாளியிலேயே தண்ணீர் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினர். தன் மகன்களிடம், "நம்பிக்கை தளர வேண்டாம்'' என்றும் "சிறையிலிருந்து வெளிக்கொணர தன்னால் இயன்றதனைத்தையும் செய்வதாகவும்'' அவர்களின் தந்தை உறுதியளித்தார்.



பீபியின் மூத்த மகனுக்கு, பள்ளி செல்லும் வயதில் இரு மகன்கள் இருந்தனர். கைதாவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டாவது மகனுக்குத் திருமணமாகியிருந்தது. அவர் சிறையிலிருக்கும்போதுதான் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பீபியின் கடைசி மகனோ பதின்ம வயதில் இருந்தான். வேலைக்குச் சென்று சம்பாதிக்க மகன்கள் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் உணவுக்கே திண்டாட்டமானது. பீபியின் வயதான கணவர் கிடைத்த வேலையைச் செய்துகொண்டிருக்க பீபியும் அவரது இரு மருமகள்களும் வீட்டு வேலை கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் தீவிரவாதியின் குடும்பம் என்றும் பொடா குடும்பம் என்றும் முத்திரை குத்தப்பட்டதால் யாரும் வேலை கொடுக்கவில்லை.



2004ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசு, பொடா கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றது. ஆனால் சட்டத்தை முன்தேதியிட்டுத் திரும்பப் பெறாததால் பொடாவில் கைதானவர்கள் விடுவிக்கப்படவில்லை. அச்சட்டத்தின் அடிப்படையிலேயே வழக்கு நடந்தது. தில்லியின் புகழ்பெற்ற கிரிமினல் வழக்குரைஞர்களான நித்தியா இராமகிருஷ்ணன் மற்றும் ஹசன் போன்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினர். குஜராத் அரசின் வாதப்படி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் முன்பே திட்டமிட்டு இதனைச் செய்ததாகவும் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை, தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்ட கோத்ராவைச் சேர்ந்த ஏழைத்தாய் பீபி காத்தூன் ஊற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை ஊற்றுவது என்பது மனித சக்தியால் இயலாத காரியம் எனத் தடயவியல் அறிக்கை கூறுகிறது. அதேபோல ரயில் பெட்டிக்குள் பெட்ரோலின் மூலக்கூறான "ஹைட்ரோ கார்பனின்'' தடயங்கள் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலப் போலீசாரால் புனையப்பட்ட இவ்வழக்கில் இதுபோன்று மேலும் பல ஓட்டைகள் இருப்பதாக இவ்வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



இவ்வழக்கு நடைபெற்ற எட்டு ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகப் பல தீர்ப்புகள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என பீபியும் மற்றவர்களும் நம்பினர். ஆனால் இவர்களது நம்பிக்கை ஒவ்வொரு முறையும் தகர்ந்தது. 2005ஆம் ஆண்டில் பொடா மறு ஆய்வுக்குழு இந்த வழக்கில் தீவிரவாத சதி இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் இந்தியாவின் பாதுகாப்பைக் குலைக்கும் அம்சங்கள் எதுவும் இல்லை எனவும் உறுதிப்படுத்தியது. இதனால் பொடாவின்கீழ் இவர்கள் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் உயர்நீதி மன்றமும் பின்னர் உச்சநீதி மன்றமும் மறு ஆய்வுக் குழுவின் முடிவையே உறுதிசெய்தன. இருப்பினும் குஜராத் அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கவில்லை. அவர்கள் மீது சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் வழக்குத் தொடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிடைக்கக்கூடிய தண்டனைக் காலத்தைவிட அதிகமான வருடங்களை விசாரணைக் கைதிகளாகவே சிறையில் கழித்துவிட்டனர். இருந்தபோதிலும் இவர்களுக்கு சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் கூட பிணை வழங்கப்படவில்லை.



இதனிடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பீபியின் கணவர் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். சாகக் கிடக்கும் தங்கள் தந்தையைக் கடைசியாகப் பார்க்க மகன்களுக்கு ஆளுக்கொரு நாள் பரோல் கொடுக்கப்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு அப்பெரிய குடும்பத்தைச் சுமக்கும் பாரம் பீபியின் தோளில் இறங்கியது. மூப்பின் காரணமாகவும் ஒரு விபத்தின் காரணமாகவும் அவரால் வேலை செய்ய இயலவில்லை. அவர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நடக்க முடியாத அவர் கோத்ரா நகரத்து வீதிகளில் நொண்டி நொண்டிச் சென்று பிச்சையெடுக்கிறார். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த அவரது மூத்த பேரனின் படிப்புக்குத் தேவைப்பட்ட பணத்தை அவர் பிச்சையெடுத்துச் சேர்த்துத் தந்தார். ஆனால் அவன் பொதுத்தேர்வில் தோல்வியடையவே அவனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார். அவருடைய இளைய பேரனை இன்னமும் முன்னதாக எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டார். அவர்கள் இருவரும் தற்போது தினமும் ஐம்பது ருபாய் கூலிக்குப் பட்டறையில் வேலை செய்கின்றனர்.



சிறையிலிருப்பவர்களைப் பார்க்கச் செல்வதற்கான பேருந்துக் கட்டணச் செலவுகள் அவர்களது ஒரு மாதச்சம்பளத்தை விழுங்கிவிடுவதால் தற்போது அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே செல்கின்றனர். சிறையில் உள்ள பீபியின் மகன்கள் உடல் மெலிந்து காசநோய் போன்ற கடும் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீபியின் கடைசி மகனான சபீக் சிறையில் புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான். காகிதத்தையும் குப்பையையும் பொறுக்கித் தின்கிறான். சில சமயங்களில் பிற கைதிகளையும் சிறை ஊழியர்களையும் தாக்குகிறான். தன் குடும்பத்திரையே அவனால் அடையாளம் காணமுடியவில்லை. "அவனை அவர்கள் பிடித்துச் சென்ற வயதில் பால்பற்கள் விழுந்து அவனுக்கு புதிய பற்கள்கூட வளரவில்லை. எனது செல்லமகனை அவர்கள் எப்படி எல்லாம் சீரழித்து விட்டார்கள்?'' என பீபி கதறுகிறார். அவனுக்கு சிகிச்சையளிக்க பரோல் கொடுக்குமாறு அவர்களது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.



உள்ளத்தை உலுக்கும் இந்தச் செய்தியை ஹிந்து ஆங்கில நாளேட்டில் எழுத்தில் வடித்த ஹர்ஷ் மந்தர் அவர்களும் அதன் சுருக்கத்தை, "பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?" எனும் தலைப்பில் 'புதிய ஜனநாயகம்' இணைய இதழில் எழுதிய திரு. சுந்தர் அவர்களும் அதைப் பதிவேற்றிய தமிழரங்கம் இணையமும் நமது ஆழிய நன்றிக்கு உரியவர்கள்.



- சத்தியமார்க்கம்.காம்



தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டதை எண்ணி பீபி கூனிக் குறுகுகிறார். மேலும் தன் மகன்கள்மீது இப்படிப்பட்ட படுபாதகக் குற்றம் சுமத்தப்பட்டதை எண்ணி வெட்கப்படுகிறார். "மகனே! நான் படிப்பறிவில்லாதவள். இந்தச் சட்டங்கள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் அப்பாவியான என் மகன்கள் ஏன் இத்தனை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என எனக்கு விளக்குங்கள்'' எனக் கேட்கிறார்.



தன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்பவர்களிடம் அவர் கெஞ்சுவது ஒன்றுதான்: "என் மகன்களைச் சிறையிலிருந்து விடுவிக்க உங்களால் உதவ முடியுமா? அவர்கள் விடுதலையாவதைக் காண நான் உயிருடன் இருப்பேனா?''



மூலம் : தி ஹிந்து



தமிழில் : சுந்தர் - புதிய ஜனநாயகம் (தமிழரங்கம்)


Thanks Satyamargam